வெள்ளி, 25 டிசம்பர், 2009

சிந்தனை துளிகள்..3


நேற்றைய அனுபவம்,
இன்றைய சிந்தனை!
இன்றைய சிந்தனை, 
நாளைய வழிகாட்டி!
நாளைய வழிகாட்டி, 
இன்றைய தத்துவம்..

தெய்வ நம்பிக்கை என்பது 
உன் உடலில் இருக்கும் 
குருதி போன்றது,
ஒவ்வொரு துளி சிந்தும்பொழுதும் 
உன் இறை நம்பிக்கையை 
நினைவுபடுத்திக் கொள்கிறாய்.

நீ கடந்து சென்ற பாதையில்தான் 
நீ மறந்து சென்ற வழிகள் இருக்கும் 
நீ மறந்து சென்ற வழிகளில்தான் 
நீ கடந்துவிட்ட வாழ்வு  இருக்கும்..

மண்ணில் இருக்கும்
இரும்பு துகள்களுக்குகூட ஒரு 
காந்தபுலன் கிடைத்துவிட்டால் 
எழுந்துவிடுகிறது,
நீயும் உன் திறமைகளுக்கான 
புலனில் எழாவிட்டால்...
உன் திறமைகளும் மண்ணில் 
மறைந்த துகள்களே..!

 

சனி, 12 டிசம்பர், 2009

சகவாச சேறு


நத்தையிட்ட ஈரம்போல்
நகர்ந்துகொண்டிருந்த பின்னிரவு,

அரவமற்ற அறையினில்
அழுதுகொண்டே தீர்ந்துகொண்டிருந்த 
மெழுகுவர்த்தியாய் அவள்..

மது நீர்த்து மாது தீர்த்திட 
கூலி கொடுக்கிறது மாமிச பட்சி,
பட்சியாய் நுழைந்ததெல்லாம்
பச்சையாய்.....!

வீணையவள் மீட்டப்படுகிறாள் 
ஈன ஸ்வரங்களாய்..
மீட்கப்பட முடியாமல்...
தந்தியறுத்து தந்தியறுத்து
பிணைக்கப்படுகிறாள் மீண்டும் 
பந்தி படைக்க.. 

என்றோ பூக்களைகூட பாரமென 
வீசியவள் தலைக்கனம் 
சகவாச சேற்றினில் விழுந்து 
புரளமுடியாமல் புலம்புகிறது..

நாதியறுத்து வந்தவளின் 
நாடியறுக்கும் உலகினில்..

வெள்ளி, 4 டிசம்பர், 2009

ஓரடிக்கயிறு



மாலையின் முற்பொழுதொன்று,
ஆயிரமாயிரம் சுக துக்க சமிக்கைகளை
தாங்கி நின்ற தந்தி கம்பமொன்றில்
பசுவும் இளம் கன்றும் ஒன்றாக
பிணைக்கப்பட்டிருந்தது ஓரடி கயிற்றினில்..

பசியுற்ற கன்று பசுவின் மடி தேட எத்தனித்தது, 
கயிற்றின் கருணைக்குறைவால் கழுத்தழுந்தியது.
கன்றுணர்ந்த பசுவும் மடி கொடுக்க முயன்று முயன்று   
தோற்றது பிடி கொடுக்காத கயிற்றின் முனையில்..

தந்திக்கம்பத்துக்கும்  பசுவுக்கும் இடையில் 
கயிறு வீணையிட்ட தந்தியாய் துடித்தது,
எங்கோ அழு குரல் கேட்டு விழிக்கின்றான் 
உண்டு களைத்த கறவைக்காரன்..

கறக்க வந்தவன் கட்டவிழ்க்கின்றான் 
கன்றுக்கு கண நேர அனுமதியுடன்..
கயிற்றில் புண்பட்ட பசு கன்றின் மெய்பட்டு 
சிலிர்த்து முத்தமிட்டது மொத்த ரணம் தீர்ந்ததாய்..
முட்டிக்குடித்த கன்று பிரிக்கப்பட்டது
கருணையின் நேரம் தீர்ந்ததாய்..

இனி மடியின் குருதி வரை 
கறக்கவிழைபவனை பார்க்கின்றது, 
நிசியில் வன்புணரும் கடைசிக்காமுகனுக்கு  
பொறுத்துக்கொண்டு கை இறுக்கும் தாசியைப்போல்...




(இது உரையாடல் சமுக கலை இலக்கிய அமைப்பு 
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)

வியாழன், 26 நவம்பர், 2009

பசி


மாரில் தங்கமறுத்த பாலுக்கு
விழைந்து வீறிட்ட குழந்தையை
இடுப்பில் தக்க வைத்து
இறைஞ்சுகிறாள்...
இரக்கமற்றவனின் வாகன யன்னலும்
இறங்க மறுக்கின்றது..
சிவப்பு விளக்கு நிறுத்தத்தில் 
பச்சிளம் தளிரின் பசி நிறுத்தமுடியாமல்..

யாசித்தவனுக்கு 
யோசித்து சட்டைப்பை தடவி 
தொட்டு விழுந்த ஒற்றை காசில் 
திறந்தது பசியடைத்த செவிகள்..

விருந்தொன்றில் 
பசியற்றவன் புசித்த மிச்சம் 
நிரப்புகின்றது குப்பைத்தொட்டியின் 
வயிற்றினை..

யாக்கையின்
முதல் வேட்கை 
தணிய துணிந்த 
பிச்சையாய்... 

வெள்ளி, 20 நவம்பர், 2009

கண்ணாடி முன்



கண்ணாடி முன்
கவிதையாய்
நான்..
கவிதையின்
அர்த்தமாய்
என்றும் நீ..

இதயத்தில்
உன்னை
தேடினேன்...
என்னை
தொலைத்துவிட்டு..

பெரிதான 
அன்பின் முன் 
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான 
உயிரிலும் 
பெரிதாக 
கலந்தது 
உன் அன்பு..

நீயும்
நானும்
பற்றிக்கொள்ள
பற்றிக்கொண்டது
காதல்
நெருப்பு..

சனி, 14 நவம்பர், 2009

சிந்தனை துளிகள்



மௌனம் சம்மதத்திற்கு பொருந்தும்
சங்கடங்களுக்கு பொருந்தாது
சங்கடத்தின் மௌனம் உன்னை
சப்தமாக கொன்றுவிடும்.

தியாகத்தில் திரியாய்
தீபத்தின் ஒளியாய் நீ
பிரகாசித்தாலும் நம்பிக்கை எனும்
எண்ணை இல்லாவிடில் உன்னால்
நிரந்திரமாய் பிரகாசிக்க முடியாது.

ஒரு பொய்க்கு உண்மையான
காரணம் இருக்கும்,
ஒரு உண்மைக்கு பொய்யான 
காரணம் இருக்கமுடியாது.

காலம் கடந்த ஞானம் 
முற்றுபெறுவதில்லை 
காலங்களை கடந்த ஞானம் 
விட்டுப்பிரிவதில்லை.

உலகை வெளிச்சமாக்கிய சூரியனால் 
உன்னை வெளிச்சமாக்க முடியாது 
உன்னில் நீ பிரகாசித்துவிட்டால் 
உன்னாலும் இவ்வுலகை 
பிரகாசிக்க வைக்க முடியும்.

அன்பை எடுப்பவன் ஆயுதத்தைவிட 
கூர்மையானவன்,
ஆயுதத்தை எடுப்பவன் அன்பினால் 
கூர்மையாக்கப்படாதவன். 

செவ்வாய், 10 நவம்பர், 2009

தொடர்பதிவு

அன்பு நண்பர் விஜய்க்காக....




1.A- Available/single - single but not reachable
                                      searching for a kind...

2.B- Best Friend - நிறைய நண்பர்கள் பட்டியலிட்டு
                               பார்க்கவேண்டுமா?

3 C - Cake or pie - இரண்டுமில்லை


4 D - Drink of choice - காபி (bru


5 E - Essential items you use everyday - My bike Suzuki Access125


6 F - Favorite Colour - ரோஸ்


7 G - Gummy bears or worms - இரண்டும் இல்லை


8 H - Hometown - கரூர்


9 I - Indulgence - வலைத்தளம்


10 J - January or February - போகி,


11 K - Kids and their names - இன்னும் மணமாகவில்லை


12 L - Life is incomplete without - ரசனை


13 M - Marriage date - சொல்லப்படாத கவிதை


14 N - Number of siblings - 1 அக்கா உஷா


15 O - Oranges / Apples - ஆப்பிள்


16 P - Phobias / Fears - இயற்கை அழிவுகள்


17 Q - Quotes for today - silence is the sound of soul
                                           violence is the mute of soul

18 R - Reason to smile - மழலைகள்


19 S - Season - குளிர்காலம்


20 T - Tag 4 people - எல்லோரும் ஒரு ரவுண்டு வந்துட்டாங்க.


21 U - Unknown fact about me - மூன்று வருடங்களுக்கு முன் மூன்றாம்பிறை கவிதை தொகுப்பு வெளியிட்டது. 


22 V - Vegitable you dont like - அப்படி எதுவும் இல்லை.

23 W - Worst habbit - வெளுத்ததெல்லாம் பால்


24 X - Xrays you had - வலது கையில்


25 Y - Your favorite food - இட்லி பூண்டு சட்னி (காரமா)


26 Z - Zodiac sign - மீனம்




அன்பிற்குரியவர்கள் - அனைத்து நட்பும்


ஆசைக்குரியவர்கள் - எதிர்பார்ப்பின் விளிம்பில்


இலவசமாய் கிடைப்பது - மழை, மழலை மொழிகள்.


ஈதலில் சிறந்தது - அன்பான பசியாற்றல்


உலகத்தில் பயப்படுவது - உலக வெப்பமடைதல்


ஊமை கண்ட கனவு - சொல்ல தெரியவில்லை.


எப்போதும் உடன் இருப்பது - Nokia 6021


ஏன் இந்த பதிவு - நட்புக்காக


ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - தக்க சமயத்தில் உதவுவது


ஒரு ரகசியம் - அன்பைவிட கூர்மையான ஆயுதம் இல்லை


ஓசையில் பிடித்தது - புல்லாங்குழல்


ஔவை மொழி ஒன்று - ஆறுவது சினம்







நன்றிகள் பல என் வலை நண்பர்களுக்கு...

வியாழன், 29 அக்டோபர், 2009

ஆனந்த நேசம்


இளையராஜாவின்
இசையில் சங்கீதமேகம் தேன் சிந்தும் நேரம்...
பாடல் எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.
அதில் சில வரிகள் மாற்றி ஓர் பாடல்.

ஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும்
பொன்மாலை தீபம் சூடும் நேரம்..
ராகம் ஒரு தீபமே! என்னில் ஒளி வீசுமே!
வீசும் ஒளி யாவும் என் பாசமே!

ஆனந்த நேசம்.....

காணும் கனவுகள் கண்ணிலே
காலம் வரைந்திடும் உன்னிலே
வீணை மொழிதனில் வானை அழைத்திட
நீ...ஓடி வா...
எந்தன் ஏட்டில் வந்த பாட்டில்
இசையாய் ஒலித்தேன்,
எந்தன் ஏட்டில் வந்த பாட்டில்
இசையாய் ஒலித்தேன்
பாடல் ஓர் தேடலே...

ஆனந்த நேசம்...

அன்பு என்னும் கீதமே!
ஆள பிறந்திடும் நாதமே!
உள்ள விழிகளில்
வெள்ளம் பெருகிடும் ஓர் ஜீவனே!
உன்னை தீட்டும் எந்த பாட்டும்
உறங்கா உறவே!
உன்னை தீட்டும் எந்த பாட்டும்
உறங்கா உறவே!
பாடல் ஓர் தேடலே....

ஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும்,
பொன்மாலை தீபம் சூடும் நேரம்..
ராகம் ஒரு தீபமே! என்னில் ஒளி வீசுமே!
வீசும் ஒளி யாவும் என் பாசமே!



(குறை இருந்தால் மன்னிக்கவும்)
நன்றி.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மருந்து


தாழப்பறந்த
பருந்தினை
சினந்து
விரட்டியது
சேவல்
பெட்டைகுஞ்சுகளுடன்..

தவழக்கிடந்த
குழந்தையின் முன்
மருந்து
வேண்டி
கர்பிணியை
உதைத்த
கணவன்..

மருந்தின் முன்
பருந்தாகிபோனவனாய்..

சனி, 24 அக்டோபர், 2009

சில சிந்தனைகள்


எல்லோரும் உன்னைப்போல்
இருக்கவேண்டும் என நீ நினைத்தால்
உன் அறிவுதான் இந்த
உலகத்தின் அறிவாக இருக்கும்..

உன்னை கடந்துவிட்ட துன்பங்களுக்கும்
உன்னால் நடந்துவிட்ட துன்பங்களுக்கும்
இடையே உள்ள வேறுபாட்டில்தான்
உன் வாழ்வின் இன்பக் கணக்கு எழுதப்படுகிறது..

சப்தங்களை நிறுத்தாதவரை
உன்னால் அமைதியை உணரமுடியாது,
எண்ணங்களை நிறுத்தாதவரை
உன்னால் தெளிவாக சிந்திக்கமுடியாது..

அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல்
இருக்கும்போது நீ மனசு சொல்வதை
மட்டும் கேள்! அறிவை கேட்காதே!
அறிவுக்கு அனைத்தையும் தெரியும்
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.

நீ புரிந்துகொண்ட விசயங்களை
தெரிந்து கொள்ள நினைக்காதே!
நீ தெரிந்து கொண்ட விசயங்களை
புரிந்து கொள்ளாமல் இருக்காதே!

நல்லதை அறிந்துகொள்!
தீயதை தெரிந்துகொள்!

செவ்வாய், 20 அக்டோபர், 2009

மனமே


மனமே!
எப்படி இருக்கின்றாய் நீ?
பேதையின் கூட்டிலும் இருக்கின்றாய்,
பேரறிவாளன் கூட்டிலும் இருக்கின்றாய்.

பறிக்கவும் கொடுக்கவும்
இரு கைகள் போதவில்லை என
ஆயிரம் கரங்கள் கேட்கிறாய்!
அழகினை ஆராதிக்க
இரு விழிகள் போதவில்லை என
ஆயிரம் விழிகள் கேட்கிறாய்!

நிறைகின்றாய் குறைகின்றாய்
நிலவைப்போல் நியதியில்லாமல்..
நினைகின்றாய் நனைகின்றாய்
நித்தமோர் நிமித்தமாய்..

உடற்சிறைபட்ட மனமே!
உணர்ச்சி பெருக்கால்
உள்ளச்சிறையும் படுகிறாய்.

அவய துடிப்புகள் எல்லாம்
சமய துடிப்புகள்வரைதான்,
வார்த்தை ரணங்கள்
கணங்கள் கடந்தாலும்
மனங்கள் கடப்பதில்லை..

இறந்து இறந்து
பிறந்து வாழ்கிறாய்
மறந்துவிட மனமில்லாத மனமே!

புத்தி உறங்கி விழிக்கிறது
மனம் உறக்கத்திலும் விழிக்கிறது
கனவு விழி திறந்து..

சிதைக்குள்
சிறைப்பட்டு சிறைபட்டே
வதைபட்டு கொண்டிருக்கின்றாய்
உணர்வுகளின் பிடியில்
நிராயுதபாணியாய்...

மனமுவந்து பார்த்தால்
மனம் ஓர் குழந்தையே..

வெள்ளி, 16 அக்டோபர், 2009

கனவு(கள்)


விளக்கொளியும் பிறையென
சிறுத்த இரவு..

சிணுங்கி சிணுங்கி
மறுதலித்தாள்,
மருதவிப்போடு..

குளிரின் படிமம்
தளிரில் படிந்திடாது
விரட்டிய வேட்கையின்
வெம்மமூச்சு..

நினைந்து நினைந்து
இணைந்த கணங்களில்
கலைந்து வெடித்த
கனவு(கள்)...

புதன், 14 அக்டோபர், 2009

கலைந்த கரு


போக்குவரத்து நிறுத்தம்..
தலைப்பு செய்தி:
குழந்தை தொழிலாளர்கள் தடை
சட்டம் நாடு முழுவதும்
நடைமுறை படுத்தப்பட்டு இருக்கின்றது
மத்திய மந்திரி பேட்டி

....கூவி .... கூவி செய்தித்தாள்
விற்றுக்கொண்டிருந்தான்
எட்டு வயது சிறுவன்.

கருக்கலைப்பு சட்டம்
அமலாக்கப்பட்டு ஐம்பது வருடங்கள்
நிறைவு விழா..
உணவு இடைவேளையில்
கலைக்கப்பட்டு பரிமாறப்பட்ட
இரட்டை கரு முட்டைகள்..

கலைக்கப்பட்ட கருவைபோல்
கலைந்துவிட்ட பள்ளிக்கனவுகள்..

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

தேவதையின் வரம்!



ஈழத்தின்
ஈனங்கள்..

ராவணன் எல்லாம்
ராணுவனாய்.. தேசத்து
சீதைகளுக்கெல்லாம்
சிதையிட்ட கேவலம்
மரித்த நாயினும் கேடாய்..
புத்த பூமியில்
மொத்த அவலமாய்..

இலங்கமும்
கலிங்கமாய்
கலங்கியதேன் ஒண்டும்
விளங்கல்ல..

ஈழத்தின்
ஈன குரல்களுக்கு செவி
சாய்க்காமல்
சாய்ந்துவிட்ட அந்தியே!
மீண்டும்
முகடேறி
முறை செய்ய வந்ததேன்?
இழவு நாட்டில்
எத்தனை சிதைகள் என்று
உளவு பார்க்க வந்தாயா?
விடியல் என்ற போர்வையில்
விடியாத பூமிக்கு..

உலகெல்லாம் என் பந்தம்
என் தேசத்தில் மட்டும்
ஏன் தீப்பந்தம்?
சமூகம் எமக்களித்த
போர்பந்தமா?

இனமெல்லாம் தனலிட்டபின்
மணலிட்ட உரம்தானே! இனி
வரமிட்டு வாழ்வது யாரிங்கே?
வரமென்று வேண்டாம்
கரமொன்று நீட்டுங்கள்
கையாலாகாத பூமியில்
கையளவாது ஈரம் மிஞ்சட்டும்...



ஊக்கமும்
ஆக்கமும்
ப.ரா , ஹேமா

வெள்ளி, 9 அக்டோபர், 2009

ஒளி



கிழக்கு முகத்திற்கு
சிகப்பு செந்தூரமிட்டவிடியல்
முகப்பு வெளிச்சம்
முற்றம் வந்தது,
மாற்றம் இல்லா விடியலை ஏற்று
மாசு இல்லா மனதால் விழித்திடு...

அக்னி பந்தொன்று கண்டேன்
மெல்லினமாய் புன்னகைத்தது
இளங்காலை விடிந்ததென்று..
வல்லின ராகம் மீட்டிடும் வேளைக்கு
வெயிலோன் வரும்முன்
துயிலை விழித்திடு மயிலே!

உலகினை படம் பிடித்த கதிரொளி
உணர்வுகளையும் படம் பிடித்து சென்றது
அந்தியில்...

பொன்னிற ஒளி சிந்தும் மாலைபொழுது
ஆய கலைகளில் சிற்பத்தையும் ஓவியத்தையும்
இணைத்தாற்போல் மேற்கு மேகம் காவியமாய்..


மஞ்சளிட்ட அந்தியே!
நான் அஞ்சலிட்ட சேதி
கண்டுவிட்ட காரணமோ!
நின் வண்ணம் நாணம் பூண்டு
செவ்வண்ணம் ஆகியதே!!

சனி, 3 அக்டோபர், 2009

மூன்றாம்பிறை

நிலவு சொல்லும் வாழ்வினை என்

நினைவு சொல்லும் கவிதையாய் எழுதுகிறேன்!


ஆயிரம் நட்சத்திர பந்தங்களுடன்

ஓர் ஒளிக் கீற்றாய் பிறந்தேன்!

பிறையென பிறந்தேன்! மதங்களில்

நிறையென வளர்ந்தேன்!


புவியின் நிழலில் என்

நிஜங்களின் வளர்ச்சி கண்டேன்!

நாளொரு மேனியும் பொழுதொரு

வண்ணமாய் வளர்ந்தேன்.


புவியுலகில் நான் பெண்ணாய்

சித்தரிக்கப்பட்டேன்!

ஆயிரம் கவிதைகள் பிறந்தன,

ஆயிரம் மொழிகளில் பிறந்தன.


அன்று பௌர்ணமி - என்

வளர்ச்சியிலும் வாழ்விலும்

முழுமையடைகின்றேன்!

பெண்மையாய் பிறந்தேன்!


எனக்குள் ஓர் கர்வம்

இன்னுமொரு சூரியன் என!

அன்று நாணத்துடன் முழுமையாய்

எழுந்தேன்!


என் இளமையின் வாழ்க்கை

அன்று மட்டும்தான்!

நான் கண்ட காட்சிகளின் விசாலம்

பிறப்பின் பயனை அன்றுதான் அடைந்தேன்.


ஆர்பரிக்காத கடல்

வெண்மேக கூட்டங்கள்

வெள்ளிப் பனி மலைகள்

வானுயர்ந்த மரங்கள், மலைகள்

முகடுகள் எனப் புவியின் எழில் அனைத்தும் ரசித்தேன்!


ஆயிரம் மழலைகளுக்கு அன்னை

அமுதூட்டினாள் என் எழில் காட்டி,

எத்தனை கவிதையும் ஈடு செய்ய முடியாத

அந்த மழலை மொழிகள்..


இப்புவியில் நான் கண்ட

துயரங்கள் சிலவால் என் முகப்பொழிவிழந்தேன்!

இதற்கு நிலவு களங்கம் என பெயர் சூடினர்.


பெண்மையாய் பிறந்தேன்!

மழலை விழி பார்த்து

தாய்மையுடன் அந்தி மறைந்தேன்!

வீழும்போது என் இளமை தேய்வதை உணர்ந்தேன்!


பிறையாய் பிறந்து நான் கண்டதை,

பெற்றதை தேய்பிறையாய் இழந்து வந்தேன்!

இங்கு கீதையின் கூற்றை நினைவு கூர்கிறேன்!


இளமையின் பார்வையில் வந்ததை

முதுமையின் கோலத்திலும் காண்கிறேன்!

இங்கு நான் எடுத்து செல்லவுமில்லை

விட்டு செல்லவுமில்லை.


எங்கு பிறந்தேனோ! அங்கு

செல்வதை உணர்ந்தேன்!

தேய்ந்து தேய்ந்து

மீண்டும் கடைசி ஒளிக்கீற்றாய்

மூன்றாம் பிறை நிலை அடைந்தேன்!

அன்று விழும்போது மரணத்தின் வாசல் கண்டேன்.


அன்று அமாவாசை!

என் மரணம் கண்டு

கடல்கள் ஆர்பரித்தன!

ஆயிரம் நட்சத்திர பந்தங்களோடு

பிறந்த என் இழப்பை ஈடு செய்ய

முடியாமல் கோடி நட்சத்திரங்கள்

விழி பூத்து என்னை தேடின..


என் மரணம் ஓர் முடிவல்ல

மீண்டும் பிறையென பிறப்பேன்!

வாழ்வில் நிறையென சேர்ப்பேன்!

என் வாழ்வே மனித வாழ்வின் தத்துவம்..