வியாழன், 14 ஏப்ரல், 2011

தமிழ் பூ



சாய்ந்து சுற்றும் உலகினில் 
நிமிர்ந்தெழும் நிதர்சனம் நீயடி, 
பருவ மங்கையின் சிரிப்பாய், சிலிர்ப்பாய் 
சப்தங்களையும் சந்தங்களையும் 
பிணைத்து பிரசவிக்கும் தமிழ்த்தாய்! 

ஒற்றை குழல் ஓசையாய்,
நாவிக் கமல நாதமாய்,
விண்ணதிரும் முரசுகளாய்,  
உலகெங்கும் விரிந்தாய் 
உணர்வெங்கும் பதிந்தாய்.

அழகை சொல்ல வந்த அழகே!
உன்னை பழகச் செய்ததென் பாக்கியமல்லவா!
இணை பிரியாமல் துணை  புரியும் உன்
அணை பிரிய மறுதலிக்குமடி மனது.

எத்தனை மெல்லிய அன்புகளால் 
என்னவளின் இதயம் திருட செய்தாய்,
அவளை கண்டு உன்னை உணர்ந்தேன் 
உன்னை கொண்டு அவளிதயமடைந்தேன்..

மொழிகளுக்கெல்லாம் மேல் நின்று 
வழி சொல்லும் உன் அகரமும் லகரமும் 
சிகரம் தொட்டதென்றால் மிகையாகாது 
என் தமிழே!

அனைவருக்கும் என் இனிய 
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..