புதன், 13 ஜனவரி, 2010

தைத்திருநாள்


போகி

செந்தூரமிட்டது அந்தி வானம், 
தாவாரம் தொட்டது ஆவாரப்பூக்கள்.
தேவாரம் பாடியது மங்கள இசை 
ஆராவாரமிட்ட சிறு பெண்டிர், 
ரீங்காரமிட்டது மாலை வண்டுகள். 
மூவடிகம்பினில் தீமூட்டி சுவைத்த
முக்கண் சூரண தேங்காய்,
பழையன பற்றி எரிந்தது போகியில்
புதிய ஜோதியாய்..

'தை'த்திருநாள் 

வானத் தை வளைக்கும் வானவில் 
நாணத் தை விளைக்கும் பூவைகள் 
கானத்  தை இசைத்திடும் பாடல்கள் 
புருவத் தை உயர்த்திடும் வீர விளையாட்டுக்கள் 
பருவத் தை அடைந்திடும் விடலைப் பெண்கள் 
கோலத் தை  ஏற்றிடும் புதிய வாசல் 
காலத் தை வென்றிடும் 
இத் தை திருநாள்..

மாட்டுப்பொங்கல் 

"சேற்றிலே" உன் கால் வைக்கும் முன் 
தன் கால் வைத்து உழைத்த காளைக்கும்
"வீட்டிலே" தாய்ப்பால் சுரக்கும் முன் 
தன் பால் தந்து காத்திடும் பசுவிற்கும்
 நன்றிகள் ஆயிரம் சொல்வோம் 
மாட்டுப் பொங்கல் திருநாளிலே..

காணும்பொங்கல் 

உழவுக்கு வந்தனமிட்டோம் 
உறவுக்கு சந்தனமிட்டோம் 
பசுவுக்கு படையலிட்டோம்
பாசத்தின் உணர்விலிட்டோம்.

ஊரெல்லாம் பொங்கலிட்டது 
உணர்வெல்லாம் பொங்கிவிட்டது 
உழைத்திட்ட உள்ளங்களே!
களைத்திட்ட சோர்வுநீங்க
ஊரெல்லாம் கூடிடுவோம் 
உளமார பாடிடுவோம் 
இக்'காணும்' பொங்கலிலே...  


அனைவருக்கும் இனிய 'தை' திருநாள் 
பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..