வெள்ளி, 9 அக்டோபர், 2009

ஒளி



கிழக்கு முகத்திற்கு
சிகப்பு செந்தூரமிட்டவிடியல்
முகப்பு வெளிச்சம்
முற்றம் வந்தது,
மாற்றம் இல்லா விடியலை ஏற்று
மாசு இல்லா மனதால் விழித்திடு...

அக்னி பந்தொன்று கண்டேன்
மெல்லினமாய் புன்னகைத்தது
இளங்காலை விடிந்ததென்று..
வல்லின ராகம் மீட்டிடும் வேளைக்கு
வெயிலோன் வரும்முன்
துயிலை விழித்திடு மயிலே!

உலகினை படம் பிடித்த கதிரொளி
உணர்வுகளையும் படம் பிடித்து சென்றது
அந்தியில்...

பொன்னிற ஒளி சிந்தும் மாலைபொழுது
ஆய கலைகளில் சிற்பத்தையும் ஓவியத்தையும்
இணைத்தாற்போல் மேற்கு மேகம் காவியமாய்..


மஞ்சளிட்ட அந்தியே!
நான் அஞ்சலிட்ட சேதி
கண்டுவிட்ட காரணமோ!
நின் வண்ணம் நாணம் பூண்டு
செவ்வண்ணம் ஆகியதே!!

சனி, 3 அக்டோபர், 2009

மூன்றாம்பிறை

நிலவு சொல்லும் வாழ்வினை என்

நினைவு சொல்லும் கவிதையாய் எழுதுகிறேன்!


ஆயிரம் நட்சத்திர பந்தங்களுடன்

ஓர் ஒளிக் கீற்றாய் பிறந்தேன்!

பிறையென பிறந்தேன்! மதங்களில்

நிறையென வளர்ந்தேன்!


புவியின் நிழலில் என்

நிஜங்களின் வளர்ச்சி கண்டேன்!

நாளொரு மேனியும் பொழுதொரு

வண்ணமாய் வளர்ந்தேன்.


புவியுலகில் நான் பெண்ணாய்

சித்தரிக்கப்பட்டேன்!

ஆயிரம் கவிதைகள் பிறந்தன,

ஆயிரம் மொழிகளில் பிறந்தன.


அன்று பௌர்ணமி - என்

வளர்ச்சியிலும் வாழ்விலும்

முழுமையடைகின்றேன்!

பெண்மையாய் பிறந்தேன்!


எனக்குள் ஓர் கர்வம்

இன்னுமொரு சூரியன் என!

அன்று நாணத்துடன் முழுமையாய்

எழுந்தேன்!


என் இளமையின் வாழ்க்கை

அன்று மட்டும்தான்!

நான் கண்ட காட்சிகளின் விசாலம்

பிறப்பின் பயனை அன்றுதான் அடைந்தேன்.


ஆர்பரிக்காத கடல்

வெண்மேக கூட்டங்கள்

வெள்ளிப் பனி மலைகள்

வானுயர்ந்த மரங்கள், மலைகள்

முகடுகள் எனப் புவியின் எழில் அனைத்தும் ரசித்தேன்!


ஆயிரம் மழலைகளுக்கு அன்னை

அமுதூட்டினாள் என் எழில் காட்டி,

எத்தனை கவிதையும் ஈடு செய்ய முடியாத

அந்த மழலை மொழிகள்..


இப்புவியில் நான் கண்ட

துயரங்கள் சிலவால் என் முகப்பொழிவிழந்தேன்!

இதற்கு நிலவு களங்கம் என பெயர் சூடினர்.


பெண்மையாய் பிறந்தேன்!

மழலை விழி பார்த்து

தாய்மையுடன் அந்தி மறைந்தேன்!

வீழும்போது என் இளமை தேய்வதை உணர்ந்தேன்!


பிறையாய் பிறந்து நான் கண்டதை,

பெற்றதை தேய்பிறையாய் இழந்து வந்தேன்!

இங்கு கீதையின் கூற்றை நினைவு கூர்கிறேன்!


இளமையின் பார்வையில் வந்ததை

முதுமையின் கோலத்திலும் காண்கிறேன்!

இங்கு நான் எடுத்து செல்லவுமில்லை

விட்டு செல்லவுமில்லை.


எங்கு பிறந்தேனோ! அங்கு

செல்வதை உணர்ந்தேன்!

தேய்ந்து தேய்ந்து

மீண்டும் கடைசி ஒளிக்கீற்றாய்

மூன்றாம் பிறை நிலை அடைந்தேன்!

அன்று விழும்போது மரணத்தின் வாசல் கண்டேன்.


அன்று அமாவாசை!

என் மரணம் கண்டு

கடல்கள் ஆர்பரித்தன!

ஆயிரம் நட்சத்திர பந்தங்களோடு

பிறந்த என் இழப்பை ஈடு செய்ய

முடியாமல் கோடி நட்சத்திரங்கள்

விழி பூத்து என்னை தேடின..


என் மரணம் ஓர் முடிவல்ல

மீண்டும் பிறையென பிறப்பேன்!

வாழ்வில் நிறையென சேர்ப்பேன்!

என் வாழ்வே மனித வாழ்வின் தத்துவம்..

புதன், 30 செப்டம்பர், 2009

ஜனனம்..



முகிலின் மரணம்
மழையின் ஜனனம்,

விதையின் மரணம்
துளிரின் ஜனனம்,

பூக்களின் மரணம்
வாசனையின் ஜனனம்,



ஞாயிறின் மரணம்
திங்களின் ஜனனம்.

இயற்கையின் எல்லா மரணங்களும் ஓர்
புனித ஜனனத்தை படைத்துவிட்டுதான் செல்கிறது.

மானிட பிறவியில் மட்டும் ஏன் மரணம்
ஓர் இறுதியாக மட்டுமே கணிக்கப்படுகிறது?



மானிட பிறவியிலும் மரணத்தில் ஓர்
ஜனனம் இருக்கின்றது,

அதுதான்...

பெண்மையின் மரணம்
தாய்மையின் ஜனனம்...

திங்கள், 28 செப்டம்பர், 2009

விழியே!

ஒளியே!
நீ பிறந்தாய்
உலகம் விடிந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் விடிந்தது.

மொழியே!
நீ பிறந்தாய்
உலகம் பேசியது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் பேசியது.

காதலே!
நீ பிறந்தாய்
கனிவு பிறந்தது,


விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் துணிவு பிறந்தது.

அன்பே!
நீ பிறந்தாய்
உலகம் பணிந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் கனிந்தது.

ஜோதியே!
நீ பிறந்தாய்
பக்தி பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள்சக்தி பிறந்தது.

பெண்மையே!
நீ பிறந்தாய்
மென்மை பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் மேன்மை பிறந்தது.

உயிரே!
நீ பிறந்தாய்
ஜனனம் பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் நான் பிறந்துவிட்டேன்...

திங்கள், 21 செப்டம்பர், 2009

சில சிந்தனைகள்


கைவண்டி இழுப்பவனின்
ஏழ்மையை சொல்லிடும்
எலும்பு வரிகள்..

ஆற்றங்கரையில் சாயம்
வெளுக்கின்றான்
சாதிகள் எனும் சாயத்தை
வெளுக்கமுடியாமல்..

பருந்தின் பார்வைக்கு
தவறிய குஞ்சுகள்
எலும்பு குவியலாய்
குப்பை மேட்டில்...

விடுதலை கிடைத்தவுடன்
தற்கொலையா!!
முறைத்துக்கொண்டும்
நுரைத்துக்கொண்டும் பொங்கிய
மதுபானம் விழப்போவது கழிவறைக்குள்
என்பதால்!!!

மறைந்துவிட்ட ஒளியினை
அழுதுகொண்டே தேடிய
மெழுகுவர்த்தி..

பேதையாய்
பிறந்ததால் என்னவோ!
மடந்தையாகியும்
மணமாகாத முதிர்கன்னி..

மழை பொழிகிறது
மாசுகளின் சாயம் துடைத்திட,
மதம் பொழிகிறது
மனிதர்களுக்கு சாயம் பூசிட...

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

நவீனமாக்கப்பட்ட நகரம்

தொடர்வண்டி திட்டத்தால்
இடர்பட்ட மரங்கள்,
சிறகொடிந்தும் சிரிக்கின்றது
வண்ணம் மாற பூக்களுடன்.

ஆலயத்தை மிஞ்சும்
செல்லிடை கோபுரங்களின்
அலைவீச்சில் மரித்துவிட்ட
சிட்டுகளின் மெட்டுக்கள்.

வற்றிவிட்ட ஊரணியில் ஓர் அணியாய்
முளைத்துவிட்ட வீடுகள்.

ஆலைய நுரையீரல்களின்
புகை சுவாசத்தால்
மேக இமைகளில் அமில கண்ணீர்.

பிள்ளை வரம் வேண்டும் வீட்டில்
வாகன உறக்கத்திற்காக
வீழ்த்தப்பட்ட தென்னம்பிள்ளை.

தரை துளைப்பானின்
தொடர் தாக்குதலில்
எலும்புகள் உடைந்து பீரிட்ட
பூமித்தாயின் பச்சை ரத்தம்.

இயற்கையின் இசையெல்லாம்
ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு
ஒலிக்கின்றது இன்றைய மங்கையின்
செவிகளை அடைத்துக்கொண்டு.

இயற்கையின் முன் நவீனமாக்கப்பட்ட
நரகமாய்...

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

சில வரிகள்..


நிழலை கண்டு
நிஜமாய் உருகாதே!
காட்சி பொருளெல்லாம் காணலே!
புற தோற்றம் புதுமைதான் அதில்
அகம் உருகுவது அர்த்தமற்றது.

செவ்வண்ண அந்தியே!
ஏனிந்த கோபம்?
வானில் முகிலின்றி
மகிழ முடியவில்லையா?

இரவின் விதவைக்கு
குங்கும பொட்டாய் வாழ்வு
தந்த காலை கதிரே!
உன்னொளி பட்டுவிட்டால்
எல்லாம் மங்கலமே!

இரவுகள் என்றும் நிரந்திரமாவை,
உறவுகள் எல்லாம் சிறு வெளிச்சம்களே!
தன் பங்கிற்கு எரிந்து விட்டு செல்லும்.
உன்னுள் நீ ஒளிர்ந்தால் மட்டுமே
வாழ்வு வெளிச்சமாய் அமையும்..